உங்கள் குழந்தைக்கு மனநோய் இருந்தால் கண்டறிவது எப்படி?
10 Oct,2018
உடல்நலக் குறைபாட்டுக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பதை போல மனநல சிகிச்சைக்கு உடனடியாக சிகிச்சை எடுக்கும் வழக்கம் மிகவும் பரவலாக உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூற முடியும்.
உடல்நலக் குறைபாடு இருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், மனநலக் குறைபாடு இருப்பது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட நபருக்கே சில நேரங்களில் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு.
ஆண்டுதோறும் ஒரு கருத்தை மையமாக வைத்து அக்டோபர் 10ஆம் தேதியன்று உலக மனநல நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையப்பொருள் 'மாறி வரும் உலகில் இளைஞர்களும் மனநலமும்' என்பது.
வளர் இளம் பருவம் என்பது உடல் மட்டுமல்லாது உள்ளமும் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகும் பருவம்.
உலகெங்கும் உண்டாகும் மனநலம் சார்ந்த நோய்களில் பாதி அளவு நோய்கள் 14 வயதிலே தொடங்குவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
வளர் இளம் வயதுள்ளவர்கள் மன நலத்துடன் இருப்பது உடனடியாகவும், நீண்ட கால அடிப்படையிலும் பொருளாதாரத்துக்கும் சமூகத்துக்கும் நன்மை அளிக்கும் என்கிறது அந்த அமைப்பு.
ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக-கலாசார மாற்றங்கள் அதிவிரைவாக நிகழும் இந்தக் காலகட்டத்தில் தனக்கோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கோ மனநலக் குறைபாடு இருப்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?
பதின் வயதினர் மற்றும் இளம் வயதினரின் மனநலம் குறித்து மனநல மருத்துவர் அசோகன் பிபிசி தமிழிடம் பேசினார். அவர் அளித்த தகவல்களை கேள்வி பதில் வடிவில் இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
பதின் வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு உண்டாக அதிகமான வாய்ப்புள்ள மன நலக் கோளாறுகள் எவை?
மன அழுத்தம், பித்து (mania - அதீத உற்சாகத்துடன் செயல்படுதல்), பிளவுபட்ட மனநோய் (Schizophrenia), ஆளுமைச் சிதைவு (Personality disorder), டெக்ஸ்ட்டாஃரீனியா (textaphrenia) ஆகிய நோய்கள் இளம் வயதினருக்கு அதிகம் வர வாய்ப்புண்டு.
மன நலக் கோளாறுகள் எப்போது தொடங்கும்? அவற்றின் தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும்?
ஒரு நபரின் தனிப்பட்ட உடலியல் பிரச்சனைகள், அவரது குடும்பச் சூழல், ஒருவர் வாழும் சமூகச் சூழல் ஆகியன மன நோய் உண்டாவதற்கான காரணிகளாக இருக்கும். பெரும்பாலான மன நோய்கள் வளர் இளம் பருவத்திலேயே உண்டாகின்றன.
வளர் இளம் பருவத்தின் பின் உண்டாகும் மன நோய்கள் நாள்பட்டதாக இருக்க வாய்ப்புண்டு. வளர் இளம் பருவம் முடிந்தபின் உண்டாகும் மன நோய்கள் பெரும்பாலும் தற்காலிகமானவையே.
பதின் வயதில் இருக்கும் ஒருவருக்கு மன நோய் இருப்பதை எவ்வாறு கண்டறிவது?
டெக்ஸ்ட்டாஃரீனியா- டெக்ஸ்ட்டாஃரீனியா என்பது தற்போது அதிகமாக பதின் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே இருக்கும் மனநோய். இந்த நோய்க்கு உள்ளவர்களால் மின்னணு கருவிகளை அதிகம் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒரு நாளுக்கு இவர்கள் பல மணி நேரம் செல்பேசி திரையையே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தங்களுக்கு யாரேனும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்களா, சமூக வலைத்தளங்களில் எத்தனை லைக்குகள் வந்துள்ளன போன்றவையே இவர்களின் பெரும் கவலையாக இருக்கும். எழுந்தவுடனேயே இவர்கள் செல்பேசியோ பிற மின்னணு சாதனத்தையோ அவற்றை அறிந்துகொள்ள முற்படுவார்கள். தூங்காமல் அந்த சாதனங்களையே புழங்கிக்கொண்டிருப்பார்கள்.
மன அழுத்தம் - நன்றாக பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்த பதின் வயதில் இருக்கும் ஒரு வளர் இளம் பருவ சிறுவனோ சிறுமியோ யாருடனும் அதிகம் பேசாமல், விளையாட்டு, படிப்பு உள்ளிட்ட எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருந்தால் அவர் அமைதியான சுபாவம் உள்ளவர் என கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவருக்கு மன அழுத்தம் இருக்கலாம்
'மேனியா' - அதேபோல அதீத உற்சாகம் மற்றும் தெம்புடன் செயல்பட்டு நீண்ட நேரம் தேவைப்படும் ஒரு செயலை குறுகிய காலத்தில் செய்து முடித்தால் அந்த சிறுவனோ சிறுமியோ 'மேனியா' எனும் மன நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
ஆளுமைச் சிதைவு- ஆளுமைச் சிதைவு இருப்பது பிறரிடம் பேசும்போதும் பழகும்போதும் வழக்கத்துக்கு மாறான கோபம், பிடிவாதம், திடீரெனெ உணர்ச்சிவசப்படுதல் போன்ற அறிகுறிகளை கொண்டுள்ள இந்நோய் வெவ்வேறு குடும்ப மற்றும் வெவ்வேறு சமூகச் சூழல்களில் வெவ்வேறு விதமாக வெளிவரும். இது பெரும்பாலும் பதின்வயதுகளிலேயே தெரியவரும்.
மனச்சிதைவு - குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்தால் மரபணு மூலம் இந்நோய் உண்டாக வாய்ப்புண்டு. பிரம்மை பிடித்தது போல நடந்துகொள்ளுதல், அதிக பயம் போன்றவற்றை அவர்கள் வெளிப்படுத்தலாம்.
இவற்றுக்கான தீர்வுகள் என்ன?
பதின்வயதில் குழந்தைகளை ஆர்வம் காட்டும் விளையாட்டு உள்ளிட்டவற்றில் இருந்து தடுக்காமல் இருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் சில பெற்றோர்களே குழந்தைகளுடன் அதிகம் உரையாடாமல் செல்பேசி உள்ளிட்ட பிறவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றனர். பெற்றோருடன் பேச்சுவார்த்தை அதிகமாக இல்லாததால் குழந்தைகளும் அதையே செய்கின்றனர்.
மேற்கண்ட ஊக்குவிப்புகள் பதின்வயதில் இல்லாமல் நேரில் அதிகமானவர்களுடன் பேசவும் விளையாடவும் யாருமின்றி சமூக வலைத்தளம், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றில் கவனத்தை செலுத்தத் தொடங்கிவிடுகின்றனர்.
பேசிப் பழக அதிகமான நண்பர்கள் இல்லாத ஒரு இளைஞர் சமூக வலைத்தளத்தில் 4000-5000 லைக்குகள் வந்துள்ளதை பற்றி நினைத்து மகிழ்ச்சி அடையும் நிலை உள்ளது. அவை கிடைக்காவிட்டால் அதுவே அவர்களின் கவலையாகி விடுகிறது.
பதின்வயதில் அதிகம் விளையாட்டும் உரையாடலும் இல்லாதபோது கருவிகளை அதிகம் சார்ந்துள்ளவர்களாகிவிடுகின்றனர் இளைஞர்கள். உணவு முதல் பாலுறவு கொள்வதற்கான துணை வரை அனைத்தையும் பெற செயலிகள் வந்துவிட்டன.
அவர்களுக்கு அதுதான் உலகம் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணம் வருகிறது. அவ்வாறு தொழில்நுட்ப உபகரணங்களில் அதிகமாக மூழ்கிவிடும் பதின்வயதினர் மற்றும் இளைஞர்களே எதாவது ஒரு காலகட்டத்தில் மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
யாரையாவது எங்காவது மரத்தடியில் அமர்ந்துகொண்டு செல்பேசியைப் பார்க்காமல் வானத்தில் குருவியை ரசித்துக்கொண்டிருந்தால் அவர்களை கையெடுத்துக் கும்பிடலாம்.