சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் உள்ள இரண்டாவது நாடு இந்தியா. பெயரில் சர்க்கரை இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்தத் தவறினால், சில ஆண்டுகளில் இந்த நோய்ப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துவிடுவோம் என, கசப்பான செய்தியைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். பச்சிளம் குழந்தைகளுக்குக்கூட, டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது என்பது துயரம்தான். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம் காரணமாக 25-35 வயதிலேயே பலருக்கும் டைப் 2 சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.
நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர, மூளை கணையத்துக்கு ஆணையிடும். உடனே, இன்சுலின் சுரந்து திசுக்கள் அந்த குளுக்கோஸைப் பயன்படுத்தத் துணைபுரியும். இன்சுலின் சுரப்பு இல்லாமல் போனாலோ, குறைந்தாலோ, வீரியம் குறைந்தாலோ, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே, சர்க்கரை நோய் என்கிறோம். நம் உடலில் சர்க்கரையின் அளவு 80-120 வரை இருப்பதுதான் சராசரி அளவு. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து பரிசோதனை செய்யும்போது, 180-க்கு கீழ் இருக்க வேண்டும்
.
உடல் பருமனானவர்கள், தொப்பை உள்ளவர்கள், அதிக மாவுச்சத்து, குறைந்த நார்ச்சத்து உணவுகளை உட்கொள்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், மரபியல் காரணங்கள் போன்றவற்றால், இன்சுலின் சுரப்பு பாதிக்கும்.
இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய, உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். இதற்கு மூன்று “இ” (Exercise, Eating, Emotional (உடற்பயிற்சி, உணவு முறை, மனநிலை) மிகவும் அவசியம். மூன்றில் ஒருவர் மட்டுமே இந்த மூன்று ‘இ’ யையும் சரியாகப் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள் இதில் இரண்டைக்கூட பின்பற்றுவது இல்லை.
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள்
காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக்கூடியவையே.
150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.
இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும். ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும். மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும். இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை.
சர்க்கரை நோய் வராமல் தடுக்கஸ
அனைவருக்கும் உடல் உழைப்பு அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
உணவில் மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்தும் புரதமும் அதிகமாகவும் இருக்க வேண்டும். கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளில் இந்த மூன்று சத்துக்களும் சரியான அளவில் இருக்கின்றன. இதைப் பிரதான உணவாக மாற்றிக்கொண்டால், சர்க்கரை அதிகமாக உடலில் சேராது. சாப்பிட்ட உணவு மெதுவாக செரிமானம் ஆவதால், இன்சுலின் தேவை அதிகம் இருக்காது.
கஞ்சி, கூழ், பழச்சாறு எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே, திரவ உணவை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், களி அடையாகச் செய்து சாப்பிடலாம்.
உணர்வுகள் நேர்மறையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றோ, வந்துவிடுமோ என்றோ பயந்து, கவலைப்பட்டு, நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடாது. பயத்தை விரட்டி எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நோயை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள். ஆல் தி பெஸ்ட்!
ஆன்டிஆக்ஸிடன்ட்
`கிரீன் டீ சாப்பிடுங்க, அதுல நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கு’. இப்படிப் பலரும் சொல்லக் கேட்டிருப்போம். நிறையப் பேருக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் உடலுக்கு நல்லது என்று தெரியும் ஆனால், அது என்னவென்று தெரியாது. டாக்டர்கள், உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம் ஆன்டிஆக்ஸிடன்ட். வயதாவதைத் தாமதப்படுத்துவது, புற்றுநோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது என உடல் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிவது ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான்.
நம் உடல் பல்லாயிரம் கோடி செல்களால் ஆனது. நோய்த்தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்கள் செல்களைப் பாதிக்கின்றன. உணவை ஆற்றலாக, ஊட்டச்சத்தாக மாற்றும்போது உருவாவதுதான் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals). நாம் உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று காரணமாகவும், சருமத்தின் மீது சூரிய ஒளிபடுவதன் மூலமாகவும்கூட ஃப்ரீ ராடிக்கல்ஸ் உருவாகின்றன. ஃப்ரீ ராடிக்கல்ஸ் வெவ்வேறு வடிவத்தில், தன்மையில், அளவில் இருக்கும்.
உடலில் இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடிக்கு எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். ஏதாவது ஒரு காரணி இந்த செல் ஜோடியைப் பாதிக்கும்போது இதில், ஒரு எலெக்ட்ரான் குறையும். இதனால்அந்த செல்கள் தனித்துவிடப்படும். இந்த தனித்து விடப்படும் செல்கள் ‘ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. இவை அருகில் இருக்கும் மற்றொரு செல் ஜோடியிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். இந்த எலெக்ட்ரான் கவர்தல் தொடர் சங்கிலியாக நடைபெற்று உடலில் உள்ள பல செல்களையும் பாதிக்கும். உடலில் சில குறிப்பிட்ட வகை நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கும்பட்சத்தில் அவை தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்த செல் ஜோடிக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்த்துவைத்துவிடும். இந்தப் பாதிப்பை சரி செய்யும் நுண்ணூட்டச்சத்துக்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எனப்படுகின்றன.
அதிகம் அறியப்பட்ட வைட்டமின் ஏ, சி, இ, செலினியம் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் திறன் வாய்ந்தவை.
யாருக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் தேவைப்படும்?
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உடலில் இயற்கையாகத் தனித்து விடப்படும் செல்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் குறையும்போது, உடலில் தனித்துவிடப்படும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்தால், புற்றுநோய், இதயநோய் எனப் பல நோய்கள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற கெட்ட பழக்கங்களும் தனித்துவிடப்படும் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். இதைத் தவிர்க்க தினசரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
கதிர்வீச்சு பாதிப்பு உள்ள இடங்களில் வசிப்பவர்கள், உடலை வருத்தி மிக அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், நோயாளிகளுக்கு இந்த தனித்துவிடப்படும் செல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிக அளவில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள், அல்சைமர் முதலான மறதி நோய்கள், கண்புரை, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்க முடியும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் எவை?
தாவர வகைகளில் காய்கறிகள், மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, கருநீலக் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கும். குறிப்பாக, இவற்றில் இருக்கும் பீட்டாகரோட்டின், கல்லீரலில் வைட்டமின் ஏ வாக மாறி, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். விதைகளிலும், எண்ணெய் வித்துக்களிலும் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களிலும் வைட்டமின் இ அதிக அளவு இருக்கும். புதினா – கொத்தமல்லி ஜூஸ், நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம். விலங்குகளில் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் இருக்கக்கூடிய ரெட்டினால், ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படும் திறன் கொண்டது.
ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகள் சாப்பிடலாமா?
உணவின் மூலம் ஆன்டிஆக்ஸிடன்ட்களைப் பெறுவதே சிறந்தது. ஏதேனும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உட்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளைச் சாப்பிடலாம். தினமும் இரண்டு கப் காய்கறி, ஒரு கப் பழம், ஏதாவது கீரை ஒரு கப் சாப்பிட்டு வந்தாலே, உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் மட்டுமின்றி அனைத்து நுண்ணூட்டச் சத்துக்களும் கிடைத்துவிடும்