ரஜினியுடன் ஈகோவை விட்டுக்கொடுத்து சேர தயார் – மீண்டும் அறிவித்த கமல்ஹாசன்
16 Dec,2020
மக்களுக்காக ஈகோவை விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத்தயார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில் தமது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கோவில்பட்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எம்ஜிஆர் அதிமுக திலகமும் இல்லை, திமுகவும் இல்லை. அவர் மக்கள் திலகம்” என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யத்துக்கு பெருகும் மக்கள் ஆதரவை பார்த்து ஆளும் கட்சி நெருக்கடியால் தங்களுடைய பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருவதாக கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
“புதியதாக வருபவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக வருவார்கள். நான் தேர்தல் அரசியலுக்கு வந்த காரணத்தை தெரிவித்து விட்டேன். ரஜினியின் கொள்கைகள் என்ன என்பதை அவர் இன்னும் கூறவில்லை. அதை அவர் விளக்கட்டும். பிறகு பார்க்கலாம்,” என்று கமல் தெரிவித்தார்.
ரஜினியின் தேர்தல் அரசியல் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நானும் ரஜினியும் ஒரு தொலைபேசி அழைப்பு இடைவெளியிலேயே இருக்கிறோம். அந்த வகையில்தான் எங்களுடைய நட்பு உள்ளது. மக்களுக்காக நானும் ரஜினியும் இணைய தயார் . மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து சேர நான் தயார்,” என்று செய்தியாளர்கள் கமல் பதிலளித்தார்.
முன்னதாக, சிவகாசியில் தொழில்முனைவோருடன் ஆலோசனை நடத்தினார் கமல்ஹாசன். அப்போது மேடையில் பேசிய அவர், “மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும். எத்தனை தடைகள் வந்தாலும் மீறிச் செல்வோம். பின் வாங்க மாட்டோம். மக்கள் திலகம் என்பது மக்கள் அவருக்கு (எம்ஜிஆர்) கொடுத்த பட்டம். அவர் மடியில் அமர்ந்தவன் நான். நாளைய தலைமுறை உங்களை போல் சீரழிய கூடாது. ஓட்டுக்கு ரூபாய் 5,000 வாங்காமல் 5 லட்சம் கேளுங்கள். நான் எதுவும் தரமாட்டேன்” என்று கூறினார்.
“ஊழல் இல்லாமல் லஞ்சம் பெறாமல் அமைச்சர், அதிகாரிகள் இருந்தால் தான் தமிழகத்தை வழி நடத்த முடியும். என்னை சினிமாகாரன் போல் தாய்மார்கள் பார்க்கவில்லை. செல்லுமிடம் எல்லாம் வெற்றி உனக்கு என மக்கள் கூறுகிறார்கள். சிவகாசி பட்டாசு தொழிலில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வேலையை நிறுத்தும் செயலை எந்த நல்ல அரசும் செய்யாது. எஜமானி அம்மா இறந்த பின்பு சாவிக்கு இங்கு சண்டை போடுகிறார்கள்” என்று கமல் பேசினார்.