1970 மற்றும் 80–களில் ரஜினியும் கமலும் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். இவர்கள் சேர்ந்து நடித்த அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதன்பிறகு இருவரும் தனித்தனியாக பிரிந்து கதாநாயகர்களாக நடித்தனர்.
இருவரையும் சேர்த்து வைத்து மீண்டும் படம் எடுக்க முயற்சிகள் நடந்தும் அது நடக்கவில்லை. எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கமல்ஹாசன் தற்போது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
ரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை ரஜினி டைரக்டு செய்ய மாட்டார். நானோ அல்லது வேறு டைரக்டரோ இயக்குவோம். நாங்கள் இணைந்து நடித்தால் அது சுவரஸ்யமான விஷயமாக இருக்கும்.
நான் நடித்த தெனாலி படத்தின் வெள்ளிவிழா நடந்த போது ரஜினி என்னுடன் மோட்டார் ‘பைக்’கில் பயணித்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
அவர் பேசும் போது ‘‘கமல் என்னை வைத்து பைக் ஓட்ட துவங்கியதும் நன்றாக ஓட்டவருமா’’ என்று கேட்டேன். அப்போது கமல் அப்படியே கீழே விழுந்தாலும் நான்தான் விழுவேன். உங்களை கீழே விழ விடமாட்டேன் என்றார்.
எங்கள் சினிமா வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்தது. அவர் என்னை கீழே விழவிடவில்லை. 1983–ல் சினிமாவை விட்டு வெளியேற முயன்ற போது கமல் எனக்கு சமாதானம் சொன்னார் என்று அந்த விழாவில் ரஜினி குறிப்பிட்டார்.
எனவே நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்கான சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த 5 வருடமாக பேச்சு வார்த்தை நடக்கிறது. அந்த படத்துக்கான எதிர்பார்ப்புகளை நினைத்து தான் பயமாக இருக்கிறது.
இவ்வாறு கமல் கூறினார்.
லிங்கா படம் கத்தி படத்தின் கதையா? பட அதிபர் விளக்கம்
விஜய், சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ளார்.
விவசாயிகள், விவசாயம், தண்ணீர் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராடும் இளைஞன் கேரக்டரில் விஜய் வருகிறார்.
ரஜினியின் ‘லிங்கா’ படமும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்தே எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏரி தண்ணீரை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்காக விவசாயிகள் பக்கம் நின்று போராடும் கேரக்டரில் ரஜினி வருகிறார் என்கின்றனர்.
கத்தி படத்தை பார்த்து ‘லிங்கா’ படக்குழுவினர் அதிர்ச்சியானதாகவும் எனவே ‘லிங்கா’ கதையை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன.
‘கத்தி’ படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இது போல் ‘லிங்கா’விலும் ரஜினி இரட்டை வேடத்தில் வருகிறார்.
‘கத்தி’ படத்தின் மைய கருவில்தான் ‘லிங்கா’ படம் தயாராகிறதா என்று ‘லிங்கா’ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
‘கத்தி’ படத்துக்கும் ‘லிங்கா’ படத்துக்கும் சம்பந்தம் இல்லை. ‘லிங்கா’ படம் முழுக்க முழுக்க வேறு கதை. ‘லிங்கா’ படத்தின் கதையை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக சொல்லப்படுவது வதந்திதான். மீண்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை.
‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தின் இறுதியில் ரஜினி வரும் காட்சியொன்றை சென்னையில் படமாக்குகிறோம். அது முக்கியத்துவமான காட்சி இல்லை. ரஜினி நடந்து வருவது போன்ற சீன்தான். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த தயாராகி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கடைதிறப்பு விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: நயன்தாரா
கடைதிறப்பு விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா அறிவித்து உள்ளார். நடிகைகள் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பர படங்களில் நடித்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறார்கள். இந்தி நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க கோடிக்கணக்கில் வாங்குகிறார்கள்.
சினிமாவை விட விளம்பர படங்கள் மூலம் கணிசமாய் சம்பாதிக்கிறார்கள். தமிழ் நடிகைகள் பலர் நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடையை திறந்து வைத்து பணம் வாங்குகிறார். ஆனால் நயன்தாராவுக்கு இது போன்று நடிப்பதில் ஆர்வம் இல்லை. இது குறித்து அவர் கூறியதாவது:–
கடை விளம்பரங்களில் கலந்து கொள்வதில் எனக்கு விருப்பம் கிடையாது. கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு நிறைய நேரம் உட்கார வைக்கிறார்கள். நம்மை வைத்து கொண்டே பூஜை நடத்துகின்றனர். பிறகு போட்டோ எடுக்கிறார்கள். நான்கு, ஐந்து தடவை வெவ்வேறு சேலைகளை மாற்றி மாற்றி உடுத்து வைத்து படம் எடுக்கிறார்கள்.
அந்த படங்களை வைத்து விளம்பர பலகைகள் தயார் செய்து ஹோர்டிங் வைக்கிறார்கள். ஒரு வருடம் அந்த ஹோர்டிங்குகள் அப்படியே இருக்கும்.
இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவேதான் கடை விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கிறேன். ஓய்வு நேரத்தை என் வீட்டில் கழிக்கிறேன்.இவ்வாறு நயன்தாரா கூறினார்
ராஜா ராணி இயக்குனர் அட்லி திருமணம். ஷங்கர் நடத்தி வைத்தார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து அதன்பின்னர் 'ராஜா ராணி' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி - பிரியா திருமணம் நேற்று சென்னையில் வெகு சிறப்பாக நடந்தது. இந்த திருமணத்தில் இயக்குனர் ஷங்கர் தாலியை எடுத்து அட்லியிடம் கொடுக்க மேளதாளங்கள் முழங்க ப்ரியாவின் கழுத்தில் அட்லி தாலி கட்டினார்.
முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் அடுத்து விஜய்யின் படத்தை இயக்கும் அளவுக்கு புகழ்பெற்ற அட்லி, சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்த ப்ரியாவை நேற்று திருமணம் செய்தார். அட்லிக்கு பெரிய அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் அட்லியும் சின்னத்திரை நடிகை பிரியாவும் காதலித்து வந்தனர். இந்த திருமணத்திற்கு கோலிவுட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நேற்று மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றாது. புதுமண தம்பதிகள் இருவரும் அடுத்த வாரம் தேனிலவுக்கு வெளிநாடு செல்லவுள்ளனர். தேனிலவுக்கு சென்று திரும்பி வந்த பின்னர் அட்லி, விஜய்யின் அடுத்த பட வேலையை தொடங்குவார்