நாயகன் பாஸ்கரின் (ஹரிஷ்) அப்பாவும், நாயகி ரஞ்சனியின் (நேகா) அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த உரிமையில் பாஸ்கர், ரஞ்சனியை தினமும் காலேஜூக்கு அழைத்துச் சென்று விடுவது, வருவதுமாக இருக்கிறார்.
பாஸ்கருக்கு வேலை வெட்டி எதுவுமில்லை. படித்துவிட்டு வேலைகிடைக்காமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, பொழுதுபோக்குவதுமாக இருக்கிறார். ஆனால், ரஞ்சனியோ ஓட்டப்போட்டியில் மாநில அளவில் இடம்பிடித்து பெரிய ஓட்டப்பந்தய வீராங்கனையாக ஆகவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. இதற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருக்கின்றனர்.
தினமும் ரஞ்சனியை காலேஜூக்கு அழைத்துச் செல்லும் பாஸ்கர், ஒருகட்டத்தில் அவள்மீது காதல் கொள்கிறான். அந்த காதலை அவளிடம் சொல்லவும் செய்கிறான். அவளும் அதை ஏற்றுக்கொண்டு இருவரும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
மறுமுனையில், ரஞ்சனியின் தாய்மாமனான ராசுக்குட்டி (அப்புக்குட்டி) ஒருதலையாக ரஞ்சனியை காதலித்து வருகிறார். கட்டினால் அவளைத்தான் கட்டிக்கொள்வேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பாஸ்கர்-ரஞ்சனியின் காதல் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவருகிறது. இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்கு செல்கிறார்கள்.
அங்கு சென்றதும் பாஸ்கர், ரஞ்சனியிடம் ஒரு முத்தம் கேட்கிறார். முத்தத்திற்கு அவளும் ஒத்துக்கொள்கிறாள். அந்த ஒரு முத்தத்தால் அவளுடன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை நாயகனுக்கு வந்துவிடுகிறது. எனவே தற்கொலை முடிவை ஒதுக்கி வைத்துவிட்டு வீடு திரும்புகிறார்கள்.
ஒருவரையொருவர் மறந்துவிட்டதாக அவர்கள் பெற்றோர்களிடம் பொய் கூறிவிட்டு, தனிமையில் சந்தித்து வருகிறார்கள். இதை நோட்டமிடும் ராசுக்குட்டி அவர்களது காதலை பிரிக்க நினைக்கிறார்.
இந்நிலையில், தனிமையில் நெருக்கமாக இருக்க நினைக்கும் பாஸ்கரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்து, ரஞ்சனியும்-பாஸ்கரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு நாவல்பழ காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குமார் (மணிகண்டன்) மற்றும் அவரது நண்பர்களின் கண்களில் இந்த காதல் ஜோடி சிக்குகிறது.
அவர்கள் பாஸ்கரை அடித்துப் போட்டுவிட்டு அவன் கண்முன்னாலேயே குமார் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் ரஞ்சனியை பலாத்காரம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்புகின்றனர். தோட்டத்தில் நடந்தது எதையுமே வீட்டுக்கு தெரியாமல் மறைக்கின்றனர்.
தன் கண் முன்னாலேயே தன்னுடைய காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ஒரு ஆண் மகனாக தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என மிகுந்த வேதனை கொள்கிறான் பாஸ்கர். ரஞ்சனியை பார்க்கவோ, அவளுடன் பேசவோ கூச்சப்படுகிறான். மறுபக்கம் தனது காதலியை கெடுத்தவர்களை பழிவாங்கவும் துடிக்கிறான்.
மறுமுனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது ரஞ்சனிக்கு அடிக்கடி நினைவில் வருவதால் ஓட்டப்பந்தயத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது.
இறுதியில் ரஞ்சனி இதையெல்லாம் மீறி தனது லட்சியத்தில் வெற்றிபெற்றாரா? தனது காதலியை கெடுத்தவர்களை பாஸ்கர் பழிவாங்கினானா? என்பதே மீதிக்கதை.
பாஸ்கராக வரும் நாயகன் ஹரிஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல் காட்சிகளில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், இவருக்கென்று படத்தில் சண்டைக்காட்சிகள் வைக்காதது குறையே.
ரஞ்சனியாக வரும் நேகா, தோற்றத்தில் அச்சு, அசல் சினேகாவை நினைவுபடுத்துகிறார். சினேகாவை அடிக்கடி திரையில் பார்க்கமுடியவில்லையே என வருத்தப்படுகிறவர்கள் இவரை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் இவருடைய நடிப்பு அபாரம். காதல் காட்சிகளிலும் உருக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பழிவாங்கும் வீரப்பெண்மணியாக உருவெடுக்கையில் கைதட்டல் பெறுகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் தலைகாட்டியிருக்கும் பாய்ஸ் மணிகண்டன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகியின் தாய்மாமனாக வரும் அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு பதில் வெறுப்பையே தருகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம்கூட குறைத்திருக்கலாம்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தன்னம்பிக்கை இருந்தால் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள். லட்சியத்தில் ஜெயிக்க தனது உயிரைக் கொடுத்தேனும் போராடுவாள் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி எடுத்திருக்கும் இயக்குனர் சுகந்தனுக்கு பாராட்டுக்கள்.
ஆனால், படத்தில் ஆரம்ப காட்சிகளை நகர்த்த ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை புகுத்தி கொஞ்சம் போரடித்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி கொண்டு சென்றிருக்கிறார். முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அருமை.
பைசல் இசையில் கானா பாலா பாடிய ‘ஓ ஜங்கிலி’, ‘மானப்போல ஓடுறவ’ ஆகிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ‘பத்திக்கிச்சே’ பாடல் நமக்குள்ளும் காதல் தீயை பற்றவைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. ரித்திஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘காதல் 2014’ புதுமை
தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் துன்பத்தை சொல்லும் படம்
இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை துடைக்க இங்கிருந்து குரல் கொடுக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் போராடுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் நாமே கதி என்று நம்பி நம் நாட்டுக்கு வந்த இலங்கை அகதிகளை எப்படி வைத்திருக்கிறோம்.
இலங்கை அரசை போலவே முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறோம். அவர்களை சந்தேக கண்ணோடு பார்க்கிறோம். தொப்புள்கொடி உறவு என்று சொல்கிறோமே இங்கிருக்கும் இலங்கை தமிழனுக்கு ஒரு வாய் சோறு கொடுத்திருப்போமா. அதை சொல்கிற, அவர்கள் வாழ்க்கையை சொல்கிற படம்தான் ஆனந்த மழை” என்கிறார் இயக்குனர் சுப.தமிழ்வாணன்.
இயக்குனரே ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அதுதவிர ஜெய் ஆனந்த், களஞ்சியம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், தீபிகா என்ற புதுமுகம் ஹீரோயின். ஸ்டீபன் ராயல் இசை அமைத்திருக்கிறார், கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
கத்தி கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்!
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘கத்தி’ திரைப்படத்தின் கதை, திருடப்பட்ட கதை என்று குற்றம்சாட்டி, ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் என் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது எனது ஊரில் ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து ‘மூத்த குடி’ என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். இந்தக் கதையை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன்.
அப்போது ஜெகன் என்பவரும் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் அந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் ‘இப்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது’ என்று விஸ்வாஸ் சுந்தர் சொன்னார்.
ஆனால் அப்போது அவருடன் இருந்த ஜெகன், ‘இந்தக் கதை ரொம்ப நல்லாயிருக்கு. இதைத் திரைப்படமாக தயாரிக்க நான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி என்னை ஏ.ஆர்.முருகதாஸிடம் அழைத்துச் சென்றார்.
கதையைக் கேட்டுவிட்டு பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ், சில திருத்தங்களைச் சொல்லி, கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் மாற்றச் சொன்னார். அதன்பின் என்னை இயக்குநராக வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவும் ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதித்தார்.
கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென்று அந்த வேலையை நிறுத்திவிட்டு ‘என்னால் இப்போது இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடியாது’ என்று சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுங்கிக் கொண்டார்.
அதன்பிறகு திடீரென்று நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அது பற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது ‘கத்தி’ திரைப்படத்தின் கதை நான் சொன்ன ‘மூத்த குடி’ கதைதான் என்று எனக்குத் தெரிய வந்தது.
எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குநர் முருகதாஸ் மற்றும் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் ‘கத்தி’ திரைப்படம் வெளியாகும் முன் எனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மீஞ்சூர் கோபி தன் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு பற்றி விசாரித்து உண்மை நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் சங்கரை நீதிமன்றம் நியமித்துள்ளது. ‘மீஞ்சூர் கோபியும், ஏ.ஆர்.முருகதாஸும் தங்களது கதையின் நகலை இவரிடம் கொடுக்க வேண்டும். இரண்டும் ஒரே கதையா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி மீஞ்சூர் கோபி தன் கதையின் நகலை அட்வகேட் கமிஷனர் சங்கரிடம் சமர்ப்பித்துவிட்டார். ஏ.ஆர். முருகதாஸோ இன்னமும் கதையின் நகலைக் கொடுக்கவில்லை. என்ன காரணம்? ஏன் தயங்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்? “இந்த வழக்கில் அட்வகேட் கமிஷனரை நீதிமன்றம் நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்.
இதுவரை கோபியை முருகதாஸ் சந்தித்ததே இல்லை. அவரிடம் எந்தக் கதையையும் கேட்கவில்லை. அதோடு, கதையின் நகலை இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் வழக்கு விவகாரமும், கதையில் உள்ள முக்கியமான அம்சங்களும் வெளியில் கசிந்துவிடும்.
அதனால் ‘கத்தி’ திரைப்படத்தின் வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகும்” என்று ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுரைப்படி கத்தி கதையை தாக்கல் செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் தயங்குவதை வைத்து, கத்தி கதையை சுட்டிருப்பாரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது
ஐ படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய எமி ஜாக்சன்!
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படம் பற்றித்தான் படத்துறையில் இப்போது பரபரப்பு பேச்சு! அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கலந்து கொள்கிறார்ஸ.ஐ படத்தின் தெலுங்கு பதிப்பின் இசையை ஜாக்கிசான் வெளியிடுகிறார் என்று தொடங்கி அடுத்தடுத்து வரும் தகவல்கள் புருவம் உயர்த்தி பிரமிக்க வைக்கின்றன.
முக்கியமாகஸஐ படத்தின் ரிலீஸ் பற்றி வெளியாகும் தகவல்கள்ஸ! அதாவது, ஐ படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன், 20000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறாராம்.
அவற்றில் சீனாவில் மட்டும் 15000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம் ஐ படம். தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல இந்தியத்திரையுலகம் கண்டிராத வகையில் ஐ படத்தைப் பற்றிய அசத்தல் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதே நேரம், இன்னொரு தகவலும் அடிபடுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் ஐ படத்துக்காக போடப்பட்ட செட் மாதக்கணக்கில் பிரிக்காமல் அப்படியே கிடக்கிறது. காரணம்..அந்தப் பாடல்காட்சியில் நடிக்க வேண்டிய எமிஜாக்சன் கால்ஷீட் தர மறுத்ததுதான்.
கடந்த சில மாதங்களுக்கு முன் குறிப்பிட்ட அந்த செட்டில் படப்பிடிப்பு துவங்கியபோது கேரவானில் மேக்கப்போட்டுக் கொண்டிருந்தார் எமி. தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை அன்று தருவதாக சொன்ன தயாரிப்பாளர் தரவே இல்லை. கடுப்பான எமி, மேக்கப்பை கலைத்துவிட்டு நேராக ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.
அன்றிரவே லண்டனுக்கும் புறப்பட்டுப்போய்விட்டார். சம்பளத்தை செட்டில் பண்ணினால்தான் பாடல் காட்சியில் நடிக்க வருவேன் என்று சொல்லிவிட்டார். இந்த பிரச்சனையினால் பாடல் காட்சி படமாக்கப்படாமலே இருக்கிறது