சினிமா செய்தித் துளிகள் திங்கட்கிழமை, மார்ச் 03
03 Mar,2014
கோச்சடையான் பாடல் வெளியீட்டில் ரஜினி, அமிதாப்பச்சன் பங்கேற்பு
ரஜினியின் ‘கோச்சடையான்’ பட பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே இருமுறை இப்பாடல்களை வெளியிடும் தேதியை அறிவித்து பிறகு தள்ளி வைத்தனர். தற்போது வருகிற 9–ந்தேதி ‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சத்யம் திரையரங்கில் காலை 10.30 மணிக்கு இவ்விழா நடக்கிறது. இதில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். ரஜினி மற்றும் ‘கோச்சடையான்’ பட கதாநாயகி தீபிகா படுகோனே மற்றும் படத்தில் நடித்துள்ள சரத்குமார், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் போன்றோரும் கலந்து கொள்கிறார்கள்.
ரஜினியும், அமிதாப்பச்சனும் ஒரே மேடையில் தோன்றுவதால் ரசிகர்கள் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா அழைப்பிதழை 3 டியில் தயார் செய்துள்ளனர். சீனாவில் இது அச்சிடப்பட்டு உள்ளது. ரஜினி உருவம் 3டியில் தோன்றுவது போல் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர். ஓரிரு தினங்களில் இந்த அழைப்பிதழ்கள் சென்னை வருகின்றன. பிறகு அவை சிறப்பு விருந்தினர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டிரெய்லரையும் இந்த விழாவில் வெளியிடுகின்றனர். ‘கோச்சடையான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, மராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் ஓடும் முதல் திரைப்படம் ‘கோச்சடையான்’, கோடையில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் இறுதியில் படத்தை தணிக்கைக்கு அனுப்புகின்றனர்.
‘கோச்சடையான்’ படத்துக்கு பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து கூறும்போது ‘கோச்சடையான்’ உலக படம். நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதில் கிளைமாக்ஸ் பாடலை எழுதியது தனி அனுபவமாக இருந்தது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடி இருக்கிறார்.
ரஜினி ஒவ்வொரு பாடலையும் கேட்டு பாராட்டினார். தொழில்நுட்ப அளவில் இது அனிமேஷன் படமே தவிர எல்லா படங்களையும் போலவே அனைத்து அம்சங்களுடன் ரசித்து பார்க்கக்கூடிய படமாகவே இது இருக்கும் என்றார்.
போட்டி இருந்தாலும் தனுசும் நானும் நல்ல நண்பர்கள்: சிம்பு
தனுசும், சிம்பும் 2000–ம் ஆண்டில் ஒன்றாகவே திரையுலகில் அறிமுகமானார்கள். அப்போது இருவருக்கும் கடும் மோதல் இருந்தது. பின்னர் அது படங்களில் இருவரும் ஒருவரை தாக்கி ஒருவர் வசனம் வைக்கும் அளவுக்கு வலுவடைந்தது.
இருவரின் ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். பேஸ்புக், டுவிட்டரிலும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துக்கள் பதிவு செய்தனர். இந்த மோதல் போக்கு கடந்த சில வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்தது. பொது விழாக்களில் இருவரும் சிரித்தனர். கை குலுக்கினர். தற்போது நெருங்கிய நண்பர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் விழாக்களில் ஒரே மேடையில் பங்கேற்பதை தவிர்த்தனர். இப்போது ஒன்றாக மேடை ஏறுகிறார்கள். சேர்ந்து வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். விருந்து நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக பங்கேற்கிறார்கள்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் சிம்பு ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த நிலையில் தனுசுடன் சேர்ந்து இருக்கும் படத்தை சிம்பு தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் சிறந்த போட்டியாளர்களால்தான் நல்ல நண்பர்களாக இருக்க முடியும். நாங்கள் அப்படித்தான் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆஸ்கர் விருது அறிவிப்பு: கிராவிட்டி 6 விருதுகளை பெற்றது
86-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரி்ல் கோலாலமாக தொடங்கியது.
கிராவிட்டி என்ற படம் 6 விருதுகளை தட்டிச் சென்றது மேலும் ஆஸ்கர் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
சிறந்த துணைநடிகர் - ஜார்டு லெடோ. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கேத்ரின். சிறந்த குறும்படம் - ஹீலியம். சிறந்த சவுண்ட் எடிட்டிங் - கிராவிட்டி. ஒப்பனை கலைஞர்கள் - மாத்யூஸ் மற்றும் லீ தேர்வு. சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன். சிறந்த ஒலிக்கலவை - கிராவிட்டி. சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிராவிட்டி. சிறந்த ஒளிப்பதிவு- கிராவிட்டி. சிறந்த துணை நடிகை - லுபிடா நியாங். சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தி கிரேட் கேட்ஸ்பை. சிறந்த அனிமேஷன் குறும்படம் -மிஸ்டர் ஹப்லாட்
கதை தான் படத்தின் கதாநாயகன்: நெடுஞ்சாலை நாயகன் ஆரி பேட்டி
‘நெடுஞ்சாலை’ படத்தின் கதாநாயகன் ஆரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் பழனியை சேர்ந்தவன். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றேன். அங்கு பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவிற்குள் நுழைந்தேன். எனது முதல் படம் ‘ரெட்டை சுழி’. தொடர்ந்து ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் நடித்தேன். இப்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணனின் ‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன்.
என்னுடன் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த சிவதா நடிக்கிறார். படத்தில் தம்பி ராமையா, சலீம், பாலிவுட் நடிகர்கள் பிரஷாந்த், நாராயணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
‘நெடுஞ்சாலை’ படம் ரோட்டோரத்தில் வியாபாரம் செய்யும் நாயகனுக்கும், ரோட்டோரத்தில் தாபா கடை நடத்தி வரும் நாயகிக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் படமாகும்.
1960,1980, 2014 வருடங்களை வெவ்வேறு காலதொடர்புகளுடன் பிரதிபலிக்கும். ரூ.7 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வருகிற 28–ந் தேதி இந்தியா முழுவதும் ரிலிசாகிறது. இந்த படம் அனைத்து தரப்பினரும் சென்று பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டின்போது பொதுமக்களிடையே சாலை விபத்தை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்து விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்வோம் என்றார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதுப்புது கதாநாயகர்கள் வருகிறார்கள். படத்திற்கு கதாநாயகர்கள் முக்கியமா? கதை முக்கியமா? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கதை தான் படத்தின் கதாநாயகன் என்று பதிலளித்தார்.
காம்ப்ளான் விளம்பர தூதராக நடிகர் சூர்யா நியமனம்
காம்ப்ளான் ஊட்டச்சத்து பானத்தின் தென் மண்டல விளம்பர தூதராக நடிகர் சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். ‘மன உறுதிக்கு வலிமை தரும் புதிய காம்ப்ளான்’ என்ற மையக்கருத்துடன் ஒரு குழந்தைக்கு அவர் ஊக்கமளிப்பது போல் இதற்கான தொலைக்காட்சி விளம்பர படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வளரும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பான துறையில் காம்ப்ளான் பிராண்டு முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிறுவனம் வெற்றிகரமாக 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு இந்த ஆண்டில் பொன் விழாவைக் கொண்டாடுகிறது.
இதற்காக பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் நடவடிக்கைகளில் புதுமைகளை புகுத்த உள்ளது. இதற்காக நடிகர் சூர்யா உள்பட மூன்று பிரபலங்களை ஒப்பந்தம் செய்துள்ளது. காம்ப்ளான் நிறுவனம் முதல் முறையாக தனது பான வகைகளின் விளம்பரத்திற்காக திரைப்பட நட்சத்திரங்களுடன் கரம் கோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காம்ப்ளானின் கூட்டு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, “லட்சக்கணக்கான குடும்பங்களின் அபிமான பெயராக காம்ப்ளான் உள்ளது. புகழ்பெற்ற இந்த பிராண்டுடன் இணைந்திருப்பதை பொதுமக்களுடன் நான் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான மாபெரும் வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் இந்தியாவின் மிக நம்பகமான பிராண்டுகளுள் ஒன்றாக திகழும் காம்ப்ளான் உடன் இணைந்தது எனக்கு பெருமையளிக்கிறது” என்று கூறினார்.
காம்ப்ளான் பிராண்டின் உரிமையாளரான ஹெய்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீமா மோடி, “கஜினி, சிங்கம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களால் ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது.
அனைத்து தரப்பினரும் பெரிதும் விரும்பும் அவரை எங்களுடைய புதிய டி.வி. விளம்பரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்தார்.
அருகிலிருந்த முழு நேர இயக்குனர் வி.மோகன், “தென் மாநிலங்களில் எமது பிராண்டின் நன்மதிப்பை மேலும் அதிகரிக்க சூர்யா உதவுவார்” என்று கூறினார்.
கோடை விடுமுறையில் விக்ரமின் ஐ படம்: இயக்குனர் ஷங்கர்
விக்ரமின் ‘ஐ’ படம் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது. வெளிநாடுகளிலும் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. சீனாவில் சண்டை மற்றும் பாடல் காட்சிகளை எடுத்துள்ளனர். இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இதற்காக உணவு கட்டுப்பாடு இருந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வருத்தியுள்ளார்.
இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. எமி ஜாக்சன் பங்கேற்கும் பாடல் காட்சியொன்று பாக்கி உள்ளது. இதை சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் அரங்கு அமைத்து படமாக்குகின்றனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறும் போது, படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. கோடை விடுமுறையில் படம் தயாராகிவிடும் என்றார்.
த்ரில்லர் படத்தில் மதுஷாலினி
அவன் இவன் படத்திற்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்கும் புதிய படம் ‘கல்பனா ஹவுஸ்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமார் இயக்குகிறார்.
கல்பனா ஹவுஸ் படம் ஏற்கெனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றியை கண்டுள்ளது.
இப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். லியாண்டர் இசையமைக்கிறார், ஜி. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பிரபல என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்குகிறார்.
அங்கு தங்கியிருப்பவர்களில் ஒவ்வொருவராக பழி வாங்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பதை மைசூர் காட்டுக்குள் திகிலூட்டும் பேய் படமாக உருவாக்கி வருகிறார்கள்.
படத்தின் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக பாடல்கள் இல்லாத படமாக தயாரித்து வருகிறார்கள்.
86 வது ஆஸ்கர் விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரி்ல் 86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாலமாக தொடங்கியது. டால்லஸ் பயர் கிளப் என்ற படத்தில் நடித்த துணை நடிகர் ஜார்டு லெட்டோவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
அதில் உலகளவில் பிரமிப்பையும், பாராட்டையும் பெற்ற 3டி அனிமேஷன் படமான ''கிராவிட்டி'' சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் உட்பட 7 ஆஸ்கர் விருதுகளை குவித்ததுள்ளது.
மேலும் ஆஸ்கர் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
சிறந்த துணைநடிகர் - ஜார்டு லெடோ
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கேத்ரின்
சிறந்த குறும்படம் - ஹீலியம்
சிறந்த சவுண்ட் எடிட்டிங் - கிராவிட்டி
ஒப்பனை கலைஞர்கள் - மாத்யூஸ் மற்றும் லீ தேர்வு
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன்
சிறந்த ஒலிக்கலவை - கிராவிட்டி
சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிராவிட்டி
சிறந்த ஒளிப்பதிவு- கிராவிட்டி
சிறந்த துணை நடிகை - லுபிடா நியாங்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தி கிரேட் கேட்ஸ்பை
சிறந்த அனிமேஷன் குறும்படம் - மிஸ்டர் ஹுப்லோட்