நடிகை ரம்யாவை கடத்தப்போவதாக விளம்பரம் வெளியிட்ட சினிமா டைரக்டர் பெங்களூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை
நடிகை ரம்யாவை கடத்திச் சென்று திருமணம் செய்ய போவதாக பரபரப்பு விளம்பரம் செய்த சினிமா டைரக்டர் மீது வழக்குப் பதிவு செய்து பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
நடிகை ரம்யா
பிரபல நடிகை ‘குத்து’ ரம்யா, தற்போது மண்டியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 14–ந் தேதி, காதலர் தினத்தன்று பெங்களூரில் வெளிவரும் ஆங்கில நாளிதழில் நடிகை ரம்யாவுக்கு, கன்னட சினிமா டைரக்டரும்–நடிகருமான வெங்கட் என்பவருடன் பனசங்கரி கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதாக கன்னட மொழியில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.
கடத்திச்சென்று திருமணம்
அந்த விளம்பரத்தில் “ரம்யா, ஏன் என்னுடைய எண்ணங்களை நீ புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். என்னுடைய காதலை ஏற்று கொள்வாயா? மாட்டாயா? என்று எனக்கு தெரியாது. அடுத்த வாரம் உன்னை கடத்திச் சென்று பனசங்கரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வேன். இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இது படத்திற்காக சாதாரணமாக எழுதப்பட்டது அல்ல. உண்மையில் இது நடைபெறும்.
படத்திற்கு ஹுச்சா வெங்கட் ( பைத்தியகார வெங்கட்) என்ற தலைப்பு வைத்துள்ளேன். கதை, திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். இந்த படத்தை என்னுடைய பெற்றோர் (லட்சுமி–கவுரம்மா தம்பதி), என்னுடைய மனைவி ரம்யா, மாமியார் ரஞ்சிதா (ரம்யாவின் தாய்) ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.“ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுராத்கர் கூறுகையில், ‘‘ஆங்கில நாளிதழில் வெளியான விளம்பரம் குறித்து ரம்யாவிடம் இருந்தோ, அவருடைய தரப்பில் இருந்தோ எந்த புகாரும் வரவில்லை. ரம்யாவும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. இதுபோன்ற தவறான விளம்பரத்தை கொடுத்தவர் மீது தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளதா? என்று சட்ட ஆலோசனை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
போலீஸ் நிலையத்தில் விசாரணை
இந்த நிலையில், பெங்களூர் கப்பன்பார்க் போலீசார் தாமாகவே முன்வந்து ரம்யாவுக்கு எதிராக விளம்பரம் செய்த சினிமா டைரக்டர்–நடிகரான வெங்கட் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர் வெங்கட்டை கப்பன் பார்க் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வெங்கட்டின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் தங்களது மகன் வெங்கட் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, நடிகர் வெங்கட்டை போலீசார் கைது செய்யாமல், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
கடந்த 2010–ம் ஆண்டும் ஜூலை மாதமும் நடிகை ரம்யாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக வெங்கட் கூறி இருந்தார். அப்போது அவர் கூறியதை ரம்யா மற்றும் கன்னட திரையுலகினர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.