சினிமா செய்தித் துளிகள் வெள்ளிக்கிழமை, 17 சனவரி 2014
17 Jan,2014
‘வீர தீர சூரன்’ நாளை ஆரம்பம்ஸ
விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டிய நாடு’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பமாகிறது.
இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம்தான் சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு நாயகனாகவும் அறிமுகமானார்கள். சூரிக்கும் ‘பரோட்டா’ சூரி என்ற அடையாளத்தை அந்த படம் ஏற்படுத்திக் கொடுத்தது.
அந்த படத்திற்குப் பிறகு இவர்களனைவரும் மீண்டும் இணையும் படம் இது.
இமான் இசையமைக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன். சிசிஎல் – சென்னை ரைனோஸ் அணியில் விஷ்ணு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
தி நெக்ஸ்ட் பிக் பிலிம் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
‘அனேகன் படம்’: கப் சிப் தனுஷ்
அனேகன் பட கெட்டப் குறித்து எந்த தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளாராம் தனுஷ்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் அனேகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.
ஆனால் அவர் எந்த மாதிரியான கெட்டப்புகளில் வருகிறார் என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை.
மேலும் தனுஷ் தான் இதுவரை வந்திராத கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம். அதனால் தனது கெட்டப் குறித்த விவரங்கள் சிறிதளவும் கசிந்துவிடாமல் இருக்க பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.
இருப்பினும் ஒரு கெட்டப் பற்றிய புகைப்படம் லீக்காகிவிட்டது. வழக்கமாக அவர் தான் நடிக்கும் படங்களின் கெட்டப்பை அவ்வப்போது போட்டோ எடுப்பார். ஆனால் இந்த படத்தில் மட்டும் புகைப்படமே எடுக்கவில்லையாம்.
ஹன்சிகா படங்களை பறிக்கும் தமன்னா
கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஹன்சிகாவுக்கு போன படவாய்ப்புகளை தமன்னா பறித்து வருகிறார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது.
தமன்னாவும், ஹன்சிகாவும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறார். நிறைய டைரக்டர்கள் நல்ல கதைகளுடன் அவரை அணுகி கால்ஷீட் கேட்கின்றனர். கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கிறார்கள். அதை ஏற்க மறுப்பதால் தமன்னா அந்த டைரக்டர்களுக்கு கவர்ச்சியாக நடிக்க தயார் என்று தூது அனுப்பி படத்தை கைப்பற்றிக் கொள்கிறாராம்.
இப்படி ஹன்சிகாவுக்கு வந்த நிறைய படங்கள் தமன்னா கைக்கு மாறியுள்ளது. அஜீத் ஜோடியாக நடித்த ‘வீரம்’ படம் ஹிட்டானதால் தமன்னா மார்க்கெட் மேலும் எகிறியுள்ளது. ஹன்சிகாவிடம் கதை சொன்ன பல இயக்குனர்கள் தமன்னா பக்கம் தாவியுள்ளனர். கவர்ச்சியால் ஹன்சிகாவை வீழ்த்திவிட்டார் என்கின்றனர்.
இதனால் கவர்ச்சிக்கு மாறலாமா? என்ற யோசனையில் இருக்கிறார் ஹன்சிகா. ஹன்சிகா தற்போது ‘அரண்மனை’, ‘மான் கராத்தே’ படங்களில் நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. தமன்னா ஆறு படங்களில் நடிக்கிறார்.
நயன்தாரா, உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ காதலர் தினத்தில் வெளியாகிறது
உதயநிதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந் தேதி காதலர் தினத்தில் ரிலீசாகிறது. முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இதன் பாடல் வெளியீடு 20–ந் தேதி நடக்கிறது.
இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமார், லட்சுமிமேனனை வைத்து சுந்தரபாண்டியன் ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.
உதயநிதி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் அறிமுகமானார். அதில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவதாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’ படம் வருகிறது.
‘நேர்எதிர்’ படத்தின் லாபத்தை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவுவேன்: கலைப்புலி தாணு
ரிச்சர்ட், பார்த்தி, ஜஸ்வர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘நேர் எதிர்’. பிரதீப் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பி.வாசு தலைமை வகித்தார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் டிரெய்லரை வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார். டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்று பேசினார்.
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் விழாவில் பேசும்போது, ‘நேர் எதிர்’ அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இந்த படத்துக்கு பொருத்தமான தலைப்பு அமைந்துள்ளது. இதன் டிரெய்லரே சீட் நுனிக்கு இழுக்கிறது. நான் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன். கதை தயாராகி விட்டது. விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளோம். ஆனால் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.
நான் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. அவர் படத்துக்கு வந்த எல்லா பிரச்சினைகளையும் அம்மா மாதிரி தாங்கிக் கொண்டார். சினிமாவில் இப்போது நன்றி உணர்வு, நல்ல நட்பு குறைந்து விட்டன என்றார்.
கலைப்புலி தாணு வரவேற்று பேசும்போது, ‘நேர் எதிர் படம் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவப் போகிறேன்’ என்றார்.
டைரக்டர் பி.வாசு கூறும்போது, இப்படத்தில் வில்லனாக வரும் பார்த்தி திரையுலகில் நிலையான இடத்தை பிடிப்பார் என்றார். கவுதம்மேனன் பேசும் போது, இந்த படத்தை இந்தி, தெலுங்கில் எடுப்பேன் என்றார்.
‘நேர் எதிர்’ படம் திரில்லர் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. சதீஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்த்தி வில்லன் கேரக்டரில் வருகிறார். அவர் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
அஜீத் ரசிகர்களுடன் மோத வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– ‘ஜில்லா’ படம் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து?
பதில்:– ‘ஜில்லா’ படம் பெரிய வெற்றி படமாக காரணமாக இருந்த எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே:– தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்?
ப:– சீயான் விக்ரம்.
கே:– உங்கள் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே?
ப:– தயவுசெய்து இதுபோன்ற தகராறுகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.
கே:– ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப:– உங்கள் வேலையை நன்றாக செய்யுங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கே:– மோகன்லாலுடன் நடித்தது பற்றி?
ப:– மோகன்லாலுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. மலையாள படமொன்றில் அவருடன் இணைந்து நடிக்க ஆசை.
கே:– இந்தி படத்தில் நடிப்பீர்களா?
ப:– நமக்கு எப்பவும் நம்ம நாடுதான்னா...
கே:– உங்களை எதிர்க்கும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?
ப:– அவர்களையும் நான் விரும்புகிறேன்.
இவ்வாறு விஜய் கூறினார்.