என்னை கவர்ந்தவர் அஜீத்– தமன்னா
நடிகர் அஜீத் தன்னை மிகவும் கவர்ந்தார் என்றார் தமன்னா. இருவரும் ஜோடியாக நடித்த ‘வீரம்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்தபடத்தில் தமன்னா கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதனை படத்தின் டைரக்டர் சிவா மறுத்தார்.
‘வீரம்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். வீரம் படத்தில் என் கேரக்டர் மிகவும் பிடித்தது. சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். வீரம் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னார். சிறு நகரத்தில் வசிக்கும் தமிழ் கலாசார பெண் வேடமாக இருந்தது. தமிழ் ரசிகர்களை எளிதாக கவரக்கூடிய வேடம். இதில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கமர்ஷியல் படமாக வந்துள்ளது.
இப்படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவங்களை மறக்க முடியாது. அவர் என்னை முழுமையாக மாற்றிவிட்டார். சினிமாவில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
‘வீரம்’ தலைப்பு அவருக்கு மிகவும் பொருத்தமானது. அவர் மிகவும் தைரியமானவர். தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அழகானது. படப்பிடிப்புக்கு வரும்போது லைட்பாய் முதற்கொண்டு அவரது ஊழியர்கள் என் ஊழியர்கள் எல்லோரிடமும் பாகுபாடு இன்றி சமமாக மதிப்பு கொடுத்து பேசுவார்.
எனக்கு இந்தப் படத்தில் வலுவான வேடம். தமிழ், தெலுங்கில் ரிலீசாகிறது. இந்திப் படங்களிலும் நடிக்கிறேன். தென் இந்திய மொழி படங்களில் நடிக்கவே எனக்கு அதிக விருப்பம் உள்ளது. தமிழில் எனக்கு பிடித்த படம் ‘பையா.’ தெலுங்கில் ‘100 சதவீதம் லவ்’ அண்ணன் தம்பியான சூர்யா, கார்த்தியுடன் நடித்து விட்டேன். இருவருமே கேரக்டர் மற்றும் வேலைகளில் வித்தியாசமானவர்கள்.
நான் தனியாகத்தான் இருக்கிறேன். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டு இருக்கிறது. சரியான நேரத்தில் எனக்கு பொருத்தமானவரை சந்திப்பேன். அது நடக்கும்போது எல்லோருக்கும் தெரிய வரும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் உள்ளனர்: அவர் கடின உழைப்பாளி- மோகன்லால் பாராட்டு
விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படம் வருகிற 10–ந்தேதி ரிலீசாகிறது.
இதில் நடித்த அனுபவங்கள் பற்றி மோகன்லால் கூறியதாவது:–
ஜில்லா படத்தில் நடிக்க நான் சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம் விஜய். இரண்டாவது காரணம் படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ். மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது படத்தின் டைரக்டர் நேசன். மலையாளத்தில் நான் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தபோது தேடிப்பிடித்து கதை சொன்னார். கதை நேர்த்தியாகவும் எனது கேரக்டர் வலுவாகவும் இருந்தது. எனவே சம்மதித்தேன்.
இதில் விஜய் தந்தை கேரக்டரில் நடிப்பதால் எனது இமேஜ் பாதிக்காது. மதுரை பின்னணியில் மரியாதைக்குரிய கேரக்டராக வேடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில் இரு ஹீரோக்கள் உள்ளனர். தமிழக– கேரள ரசிகர்களை இந்த படம் திருப்திப்படுத்தும். விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் பலம் உள்ளது.
இரு மாநிலங்களிலும் ‘ஜில்லா’ இனிய பொங்கல் விருந்தாக இருக்கும்.
விஜய்க்கு இந்த இளம் வயதிலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. அது தன்னை ஆக்கிரமித்து கொள்ள அவர் அனுமதித்தது இல்லை. நிறைய நல்ல குணங்கள் அவரிடம் இருக்கிறது.
நேரம் தவறாமையை கடைபிடிக்கிறார். ஒழுக்கமாக இருக்கிறார். கடினமாக உழைக்கிறார்.
ஜில்லா படத்தை என் மனைவியுடன் பார்த்தேன். மனைவிக்கு மிகவும் பிடித்தது. ஜில்லா படத்தை வாங்கி கேரளாவில் 300 தியேட்டர்களில் நான் திரையிடுகிறேன்.
இவ்வாறு மோகன்லால் கூறினார்.
டமால் டுமீல்' படத்தில் உஷா உதுப் பாடிய பாடல் இன்று வெளியீடு
இசையமைப்பாளர் தமனின் புதிய படமான 'டமால் டுமீல்' படத்தின் பாடல்கள் தற்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் வைபவும், 'பீட்சா' படப்புகழ் ரம்யா நம்பீசனும் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தினை ஸ்ரீ இயக்கி வருகின்றார்.
பாடல் ஒலிப்பதிவு பற்றி ஸ்ரீ கூறுகையில், இந்தப் படத்தின் தலைப்புப் பாடலாகவும், விளம்பரப் பாடலாகவும் எழுதப்பட்ட ஒரு பாடலைப் பாட வித்தியாசமான குரல் வேண்டும் என்று தமனிடம் கூறினேன். இதனைக் கேட்ட அவர் இதற்காக பாடகி உஷா உதுப்பைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பாடலின் இசை வடிவத்தை அனுப்புமாறு கேட்டிருந்த உஷா உதுப்பிற்கு அந்தப் பாடல் அனுப்பப்பட்டது. அதன் இசையால் கவரப்பட்ட உஷா இங்கு வந்து பாடிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.
அவர் பாடத் தொடங்கியதுமே அந்தப் பாடலின் சக்தி வெளிப்பட்டது. பாடலைப் பாடி முடித்ததும் இந்த வருடத்தின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று குறிப்பிட்ட உஷா உதுப் தனது நிகழ்ச்சிகளிலும் இனி இந்தப் பாடலைப் பாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் 'பேட் பாய்' பாடலை எழுதிய கருணாகரன் இந்தப் பாடலையும் எழுதியுள்ளார். கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்தப் பாடல் கதையின் கருவையும் ஒட்டி அமைந்துள்ளது. எனவே, திரையில் காணும்போது ரசிகர்கள் இதனை நன்றாக அனுபவிக்க முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கூறினார். ஒற்றைப் பாடலாக இந்தப் பாடல் இன்று வெளியிடப்படுகின்றது.
நான் வைத்திருந்த ‘காதல் இளவரசன்' பட்டத்தை ஆர்யாவுக்கு கொடுக்கிறேன் - கமல் ருசிகர பேச்சு
பழைய நடிகர்களில் மறைந்த ஜெமினிகணேசனை காதல் இளவரசன் என்று அழைப்பது உண்டு. அதன் பிறகு கமலஹாசன் இந்த பட்டத்தை பெற்றார். தற்போது ஆர்யா கைக்கு அது மாறியுள்ளது.
ஆர்யா நடிகைகளுடன் அடிக்கடி இணைத்து பேசப்படுகிறார். நயன்தாரா, டாப்சியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து காதல் வலையில் வீழ்த்துவதாக செய்திகள் பரவின. ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷாலும் இதனை உறுதிபடுத்தினார்.
இந்த நிலையில் ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்த 'ராஜா ராணி' படத்தின் 100–வது நாள் வெற்றி விழாவுக்கு கமலஹாசனை அழைத்து இருந்தனர். இந்த விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசும்போது, காதல் இளவரசன் பட்டத்தை பல வருடங்களாக நான்தான் வைத்து இருந்தேன். அதை நான் ஆர்யாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். ஆர்யாதான் அடுத்த ‘காதல் இளவரசன்’ என்றார். இதை கேட்டு கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலையும் கரகோஷமும் எழுந்தது.
ஆர்யாவுக்கு கமல் காதல் இளவரசன் பட்டத்தை சூட்டியதை வரவேற்கிறோம் என்றார் படத்தின் இயக்குனர் அட்லி. நடிகர்கள் பலர் தங்கள் பெயர்களுக்கு பின்னால் பட்டங்கள் வைத்துள்ளனர். ஆர்யா மட்டும் இதுவரை எந்த பட்டத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இனிமேல் அவரது ரசிகர்கள் கமல் வைத்த ‘காதல் இளவரசன்’ பட்டத்தை சூட்டி அழைக்க தயாராகி வருகிறார்கள்.
சினிமாவில் போலீஸ் கதைகள் வெற்றி பெறுகின்றன: டைரக்டர் பேரரசு பேச்சு
ஜாக்கிசான் நடித்த ‘போலீஸ் ஸ்டோரி 2013’ படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில், டைரக்டர் பேரரசு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘தமிழ் சினிமாவில், போலீஸ் கதைகள் எப்போதுமே வெற்றி பெற்று வருகின்றன. சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்,’ ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்,’ கமல்ஹாசன் நடித்த ‘காக்கி சட்டை,’ விஜய் நடித்த ‘போக்கிரி,’ சூர்யா நடித்த ‘காக்க காக்க’ ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். போலீஸ் கதைகளை படமாக்கினால், குறைந்தபட்ச உத்தரவாதம் உறுதி.
நிறைய நடிகர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபல கதாநாயகர்கள் ஆகியிருக்கிறார்கள்.
அதிரடி சண்டை காட்சிகளுடன் நகைச்சுவையையும் கலந்து நடித்த முதல் கதாநாயகன், ஜாக்கிசான்தான். அவர் குழந்தைகளை கவர்ந்தது அப்படித்தான்.
இங்கே வந்திருக்கிற பரத் என் டைரக்ஷனில் பழனி, திருத்தணி ஆகிய 2 படங்களில் நடித்தார். ஒருநாள் கூட அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததில்லை. காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் காலை 8-30 மணிக்கே ‘செட்’டுக்கு வந்து விடுவார். நேரம் தவறாமைக்கு சிவாஜி, ரஜினி, விஜய் ஆகிய மூன்று பேரையும் சொல்வார்கள். அந்த வரிசையில், பரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.’’
இவ்வாறு பேரரசு பேசினார்.
பட அதிபர் புஷ்பா கந்தசாமி, நடிகர் பரத், வினியோகஸ்தர்கள் பெரோஸ் இலியாஸ், விபின், அழகர் ஆகியோர் கலந்துகொண்டார்கள். சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் வரவேற்று பேசினார்.
திருமணத்தில் விருப்பம் இல்லை: நடிகர் சல்மான்கான் பேட்டி
இந்தி நடிகர் சல்மான் கான் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். 48 வயதான அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
எனக்கு திருமணத்திலோ அல்லது பெண் தோழிகளை வைத்து கொள்வதிலோ விருப்பம் கிடையாது. நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டாக தனிமையில் வசித்தே பழகிவிட்டேன். தனிமையை தான் விரும்புகிறேன்.
தனிமையாக வசிப்பதால், செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதை பற்றி விவரித்து கூற வேண்டியதில்லை. நான் யாரிடமும் பொய் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
யாராவது என் வாழ்வில் குறுக்கிட விரும்பினால் தாராளமாக வரலாம். ஆனால் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நான் பெண்களை மதிப்பவன். அவர்கள் மீதான மதிப்பை இனியும் தொடருவேன். நான் ஒருமுறை கூட யாரிடமும் பொய் பேசியதே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நாக்பூரில் ஜெய் ஹோ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் தள்ளுமுள்ளு செய்த சம்பவத்துக்கு சல்மான் கான் அதிருப்தி தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ ரசிகர்கள் என்னை தொலைவில் இருந்து ரசிக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.
ஏனென்றால் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு குழந்தைகள் உள்பட பலருக்கும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற செயல்களில் ரசிகர்கள் மறுபடியும் ஈடுபட்டால், நான் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். உங்களது அன்பு மற்றும் அரவணைப்பை பெரிதும் மதிக்கிறேன். அவற்றை பெருமையாக கருதுகிறேன்’’ என்றார்.