டெல்லி உயர் நீதிமன்றம் ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க மறுத்த விடயத்தை தனக்கு யாரும் தெரிவிக்காததால் அந்த படத்திற்கு தடை விதித்து தவறு செய்துவிட்டதாக நீதிபதி ஜெயசந்திரா தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள ராம் லீலா படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது.
இந்நிலையில் ராம் லீலா படம் இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி 6 பேர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரா படத்திற்கு தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக படத்திற்கு தடை கோரி என்.ஜி.ஓ டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததுடன், என்.ஜி.ஓ.வுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது.
இந்நிலையில் தான் ஜெயசந்திரா படத்திற்கு தடை விதித்தார். இதையடுத்து ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியாஸ் லிமிடெட்டின் சார்பில் வழக்கறிஞர் அமித் சிபல் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி ஜெயசந்திராவிடம், ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க மறுத்துடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை அவர் அளித்துள்ளார்.
மேலும் படத்தின் முழுதலைப்பு கோலியான் கி ராஸ்லீலா என்பதையும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி தனது தடை உத்தரவை வாபஸ் பெற்றார்.
இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ராம் லீலா படத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை மனுதாரர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் அதனால் படத்திற்கு தடை விதித்து தவறு செய்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.
ப்ரியா ஆனந்தின் ஆசை
பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் ப்ரியா ஆனந்த்.
எதிர்நீச்சலுக்கு பின் ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டார் ப்ரியாஆனந்த்.
இதுவரை தனக்கு கிடைக்கிற கதைகளில் நல்லதாக தெரிவு செய்து நடித்து வரும் ப்ரியா ஆனந்துக்கு, இப்போது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டுமென்று ஆசை அதிகரித்துள்ளதாம்.
குறிப்பாக ஒரு படத்திலாவது பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாம்.
அப்படியொரு வாய்ப்பை யாராவது கொடுத்தால் இழுத்தடிக்காமல் கேட்கிற நேரத்தில் கால்ஷீட் கொடுத்து நடிக்கத் தயாராக உள்ளாராம்.
ரஜினியின் ‘கோச்சடையான்’ ஜனவரி 10–ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படங்களுடன் ‘கோச்சடையானும்’ மோதுகிறது.