கவுதமிற்கு கை கொடுத்தார் அஜீத்
28 Oct,2013
சூர்யா, விக்ரம் கைவிட்டனர்: கவுதமிற்கு கை கொடுத்தார் அஜீத்!!
‘நீதானே என் பொன்வசந்தம்’ கொடுத்த தோல்வியால் ரொம்பவே துவண்டுவிட்டார் கவுதம் மேனன். பல வெற்றிகளை கொடுத்த ஒரு இயக்குனரை ஒரு தோல்வி ஓரம்கட்டிவிட்டது.
அடுத்து ஒரு வெற்றிப்படம் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கவுதமிற்கு ஒரு வாய்ப்பு வழங்ககூட சினிமா உலகம் தயக்கம் காட்டுகிறது. காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் மூலம் சூர்யாவை அடுத்த அடுத்த களத்துக்கு கொண்டு சென்றவர் கவுதம் மேனன்.
இந்த படங்களில் கவுதமை நம்பி சூர்யா நடித்தார் ஜெயித்தார். கவுதம் மேனன் தோல்வி படங்களை சந்தித்துவிட்டதால் இப்போது பழைய நம்பிக்கையுடன் நடிக்கத் தயாராக இல்லை. இந்த ஈகோவால் கவுதம் படத்திலிருந்து விலகிவிட்டார் சூர்யா.
ஆனாலும் கவுதமிற்கு துருவ நட்சத்திரம் கதை மீது அபார நம்பிக்கை இருக்கிறது. விக்ரமை அணுகினார். ஆரம்பத்தில் சம்மதித்த விக்ரம், ஐ படத்தின் பணிகள் முடியவே இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று சொல்லி நழுவிட்டார்.
இப்போது அஜீத் நான் நடித்து தருகிறேன் என்று முன்வந்திருக்கிறார். ஏற்கெனவே கவுதமின் துப்பறியும் ஆனந்த் படத்தில் அஜீத் நடிக்க வேண்டியது அந்த ப்ராஜக்ட் டிராப் ஆனது. இப்போது கவுதம் மேனனுடன் இணைகிறார் அஜீத்.
அஜீத் தற்போது நடித்து வரும் வீரம் படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டுக்குள் முடிந்து விடும். பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுதம் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று தெரிகிறது. வீரம் படத்திற்கு பிறகு கால் ஆபரேஷன் செய்ய முடிவெடுத்திருந்த அஜீத், ஆபரேஷனை மேலும் 6 மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார். தற்போது ஆரம்பம் படத்தை தயாரித்துள்ள சத்யசாய் மூவீஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.